AANMEEGA ARAKADDALAI
ஆன்மீக அறக்கட்டளை
ආන්මීග අරකඩ්ඩලෙයි
ELAVALAI SARVAMATHA
AANMEEGA ARAKADDALAI
LATEST EVENT - December 1, 2022
தமிழ்:
பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையில் மாணவர்களுக்கு தற்சார்பு பொருளாதாரம் தொடர்பாகவும், போதைப்பொருள் விழிப்புணர்வு தொடர்பாகவும் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதன்போது 200 தென்னங்கன்றுகளும் மரக்கறி விதைப் பொதிகளும் வழங்கப்பட்டன. இளவாலை சர்வமத ஆன்மீக அறக்கட்டளையின் போசகர் அருட்தந்தை சி.ஜி. ஜெயக்குமார் அடிகள், தலைவர் திரு. அல்பேட் தேவராஜன், தெங்கு அபிவிருத்தி சபையின் வட பிராந்திய முகாமையாளர் திரு வைகுந்தன், ஓய்வு நிலை அதிபர் திரு ஸ்ரீ காந்தன், தமிழர் சக்தி அமைப்பின் பிரதானி திரு ரவிமயூரன் ஆகியோர் கருத்துரையை வழங்கினார்கள்.
இந் நிகழ்வில் இரு மாணவிகளுக்கு கல்விக்கான உதவியாக தலா ரூபா 10,000/- கொடுக்கப்பட்டதுடன் உரும்பிராய் கற்பக விநாயகர் கலாசார மண்டபத்தினரால் திருக்குறள் நூல்களும் பாடசாலை நூலகத்துக்கு அன்பளிப்பு செய்யப்பட்டன. அமரர் திரு சோமசேகரசுந்தரம் (யாழ்.இந்துக்கல்லூரி முன்னாள் ஆசிரியர்) நினைவாக அவரது மாணவர் தனது குருவுக்கு வழங்கும் நன்றியாக தேவையான நிதி உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்வின்போது மேலதிகமாக வேறு இரு மாணவிகளுக்கு மாதாந்த உதவி வழங்குமாறு இளவாலை சர்வமத ஆத்மீக அறக்கட்டளை அமைப்பிடம் பாடசாலையின் அதிபர் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தார். இது தொடர்பில் கொடையாளர்களுடன் பேசி மிகுதியாக உள்ள பணத்தில் மாதாந்த உதவியை வழங்குவதற்கு ஆவன செய்வதாக உறுதியளிக்கப்பட்டது.
October 2, 2022
தமிழ்:
02.10.2022 ஞாயிற்றுக்கிழமை இளவாலை சர்வமத ஆத்மீக அறக்கட்டளை வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 200 குடும்பங்களுக்கு தலா 2 தென்னம்பிள்ளைகள் வீதம் 400 தென்னம்பிள்ளைகள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் தற்காலத்தில் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை பற்றியும் தற்காப்பு பொருளாதாரம் பற்றியும் பயனாளிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
அன்றைய தினம் சர்வதேச சிறுவர் தினத்தையும் நினைவு கூரும் வகையில் பயனாளிகளுடன் இணைந்து அவர்களின் பிள்ளைகளான சிறுவர்களும் தென்னம்பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வுக்கான நிதி அனுசரணையை லண்டனில் வசிக்கும் கலாநிதி லொறோய் அவரின் தாயார் அமரர் திருமதி அன்னம்மா ஜோசப் (இளைப்பாறிய ஆசிரியை, சில்லாலை) அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கியிருந்தார். அவருக்கு இந்த நேரத்தில் எமது மனம் நிறைந்த நன்றிகள் உரித்தாகட்டும்.
இவ்வாறான உதவிகளை ஏனையவர்களும் தமது அன்புக்குரியவர்களின் ஞாபகார்த்தமாகவோ, தங்கள் திருமண நாள், பிறந்த நாள் கொண்டாட்டங்களின்போதோ உங்கள் உங்கள் ஊரில் உள்ள ஏழைகளுடன் சேர்ந்து இவ்வைபவங்களை அர்த்தமுள்ளதாக்கவேண்டும் என்பதே அமது தாழ்மையான வேண்டுதலும் பிரார்த்தனையும் ஆகும்.
இளவாலை சர்வமத ஆத்மீக அறக்கட்டளை லண்டனில் வசிக்கும் கலாநிதி இரவீந்திரன், அவரது சகோதரர் நகுலேந்திரன் ஆகியோர் இணைந்து சண்டிலிப்பாய் சிறி அம்மன் அறக்கட்டளை ஊடாக வழங்கிய 2 இலட்சம் ரூபா நிதி உதவியுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
“மக்கள் சேவை மகேசன் சேவை”-சுவாமி விவேகானந்தர்.
நன்றி.